மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் - மத்திய மந்திரி அமித்ஷா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் - மத்திய மந்திரி அமித்ஷா
Published on

புதுடெல்லி,

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது நாளை (புதன்கிழமை) விவாதம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் முன்னேற்றத்தில் மோடி தலைமையிலான அரசுக்கு உள்ள முழு ஈடுபாட்டையே இது வெளிப்படுத்துகிறது. வருத்தம் என்னவென்றால், எதிர்க்கட்சியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது.

மகளிருக்கான சட்டங்களை காங்கிரஸ் காலாவதியாக விடலாம் அல்லது மசோதா தாக்கல் செய்வதை அவர்களின் நட்பு கட்சிகள் தடுத்திருக்கலாம். திட்டத்தின் பலனை எடுத்துக்கொள்ள அவர்கள் எந்தசெயலில் ஈடுபட்டாலும் காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வராமல் இருக்காது" என்று அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com