

புதுடெல்லி,
டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் நள்ளிரவுக்கு மேல் பனிப்பொழிவும் உள்ளது. இந்த தாக்கத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக காற்றில் மாசு அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நிலைமை மோசம் அடைந்தது. மெல்லிய போர்வை போன்ற அடர்த்தியான மாசு நகரை சூழந்து இருந்தது. அதாவது சராசரி அளவை விட பல மடங்கு மாசு காற்றில் அதிகரித்து காணப்பட்டது.
இதுபற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காலை வெளியிட்ட அறிக்கையில், நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து டெல்லி மாநிலத்தில் சிலநாட்களுக்கு பள்ளிகளை சில நாட்களுக்கு மூடுவது குறித்து பரிசீலிக்கும்படி துணை முதல்மந்திரியை கேட்டுக் கொண்டு இருப்பதாக மாநில முதல்மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் நாளை அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால், விடுமுறை நீட்டிக்கப்படும் என்று துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.