

புதுடெல்லி,
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இன்று (ஜூலை 19) சந்திக்க உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையை செயல்படுத்துவது, கஞ்சிகோடு ரயில் பெட்டி தொழிற்சாலை, சபரிமலை ரயில் திட்டம், கேரளாவுக்கான உணவு தானிய ஒதுக்கீடு அளவை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் அனைத்துக் கட்சிக் குழுவினர் பேச உள்ளனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்றார். முன்னதாக, கடந்த மாதம் பிரதமரைச் சந்திக்க கேரள முதல்வர் தலைமையிலான குழுவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்போது, பிரதமர் அலுவலகம் இதுகுறித்து தெரிவிக்கையில், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை சந்தித்து கேரளத்துக்கான தானிய ஒதுக்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என்று கூறிவிட்டது.
இதுகுறித்து அப்போது, கருத்துத் தெரிவித்த பினராயி விஜயன், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை கருத்தில் கொள்ளாமல், கேரளத்தையும் அதன் கோரிக்கைகளையும் பிரதமர் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், கேரள பிரதிநிதிகள் குழுவை பிரதமர் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது