

புதுடெல்லி,
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பாதித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் நலிவுற்ற நிறுவனங்களை அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரால் சீனா கையகப்படுத்தும் ஆபத்து இருப்பதாக உணரப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு அதிரடியாக அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில் திருத்தங்கள் கொண்டு வந்தது. அன்னிய நேரடி முதலீடுகளில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. மேலும், இந்திய நிறுவனம் ஒன்றில் தற்போது இருக்கிற அல்லது எதிர்காலத்தில் செய்யக்கூடிய அன்னிய நேரடி முதலீடு மூலம் நிறுவனத்தின் உரிமையை மாற்றி கொள்வதற்கும் மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையொட்டி டெல்லியில் சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கூறியதாவது:-
அன்னிய நேரடி முதலீட்டில் இந்தியா கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள், உலக வர்த்தக அமைப்பின் பாகுபாடற்ற கொள்கையை மீறுவதாக அமைந்துள்ளது. இது தாராள வர்த்தகத்தின் போக்குக்கும் எதிராக உள்ளது.
முதலீட்டுக்கான தாராளமான, நியாயமான, பாகுபாடற்ற வெளிப்படையான சூழலை உருவாக்குவது தொடர்பாக ஜி-20 நாடுகள் இடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்துக்கும் எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.