

ராஜஸ்தான்,
இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் பகுதியில், ரூ.1.5 கோடிக்கும் அதிகமான செலவில் வாஜ்பாயின் பிரம்மாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய மந்திரி அமித் ஷா, அங்கு நிறுவப்பட்டிருந்த 21 அடி உயர வாஜ்பாயின் உருவச்சிலையை திறந்து வைத்தார். பின்னர், சிலைக்கு மலர்தூவி தனது நெஞ்சார்ந்த வணக்கத்தை செலுத்தினார். இந்த விழாவில் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி பஜன் லால் சர்மா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்து மத்திய மந்திரி அமித் ஷா பேசியதாவது:-
வாஜ்பாய் தனது சிறுவயதிலிருந்தே தேச நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, தூய்மையான தேசியவாத பாதையில் பயணித்தவர். சர்வதேச நாடுகளின் கடும் அச்சுறுத்தல்களுக்கும், உலகளாவிய அழுத்தங்களுக்கும் சற்றும் பணியாமல், பொக்ரான் சோதனையை நடத்தி இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றி காட்டிய தலைவர் வாஜ்பாய்.
இந்தியாவின் இதயங்களாக விளங்கும் ஒவ்வொரு கிராமத்தையும் சாலைகள் மூலம் இணைக்கும் பணியை தொடங்கி, நாட்டின் உள்கட்டமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். வாஜ்பாயின் பதவிக்காலத்தில், வரலாற்றிலேயே முதன்முறையாக பழங்குடியினர் நல அமைச்சகத்தை நிறுவியது அவரது மிக முக்கியமான, உன்னதமான சாதனைகளில் ஒன்றாகும்.
இவ்வாறு அதில் கூறினார்.