

போர்ட் பிளேர்,
உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று அந்தமான் சென்றுள்ளார். அந்தமானில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
நேற்று மாலையில் போர்ட்பிளேர் சென்று இறங்கிய அவரை போர்ட் பிளேர் விமான நிலையத்தில் துணை நிலை கவர்னர் டி.கே.ஜோஷி, குல்தீப்ராய் சர்மா எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். சிறிது நேரத்துக்குப்பின் அங்குள்ள புகழ்பெற்ற சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அங்கு சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்ற அமித்ஷா, அங்கு அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இன்று அவர் பசுமை சுற்றுலா மற்றும் நீர் விமான போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்கிறார். நாளை அவர் அந்தமான் போலீசார் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.