

பெங்களூரு,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த பல்வேறு விழாக்களில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு அமித்ஷா கர்நாடக மாநிலம் உப்பள்ளிக்கு ராணுவ விமானம் மூலம் வந்தார்.
பின்னர் அவர் உப்பள்ளி டவுனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். நேற்று காலையில் அவர் அங்கிருந்து மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழாவுக்கு தயாரானார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் உடனடியாக ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை குறைந்தது 2 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மேலும் அவர் ஓட்டலிலேயே தங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித்ஷாவை சந்திக்க அந்த ஓட்டல் முன்பு பா.ஜனதாவினர் திரண்டனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே திட்டமிட்டபடி மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டிட திறப்பு விழா, ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கான கட்டிடம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மைய கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. இதில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கர்நாடக மருத்துவ கல்வி மந்திரி சரணபிரகாஷ் பட்டீல், முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், மூவாயிரம் மடத்தின் மடாதிபதி குருசித்த ராஜயோகிந்திரசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெலகாவியில் நடைபெற இருந்த கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழாவையும் அமித்ஷா ரத்து செய்தார். அந்த கட்டிடத்தையும் பா.ஜனதா தலைவர்கள் திறந்து வைத்தனர். அமித்ஷா உடல் நலக்குறைவால் தொடர்ந்து ஓட்டலிலேயே ஓய்வு எடுத்தார். முன்னதாக நேற்று காலை அமித்ஷாவை ஓட்டலில், கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் மாலை 5.45 மணியளவில் அமித்ஷா திடீரென அந்த மருத்துவ கல்லூரி, ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் உப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக டெல்லிக்கு தனிவிமானத்தில் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.