

லக்னோ,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லக்னோவில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் ஒருபோதும் திரும்ப பெறப்படாது என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தின் போது அவர் பேசியதாவது;-
எதிர்கட்சியினரின் கண்கள் ஓட்டுவங்கி என்ற திரையால் மறைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களால் உண்மையை காண முடியாது.
ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாட்டின் எந்த பகுதியில் வைத்தும் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? குடியுரிமை திருத்த சட்டத்தில் ஒருவரது குடியுரிமையை பறிக்கும் ஏதாவது ஒரு அம்சத்தை அவர்கள் எனக்கு காட்டட்டும்.
எதிர்ப்புகளை கண்டு ஒருநாளும் நாம் பயப்படப்போவதில்லை. எத்தகைய போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என்று அவர் கூறினார்.