உதய்பூர் கொலையுடன் ஒத்துப்போகும் அமராவதி கொலை? என்.ஐ.ஏ விசாரணைக்கு உள்துறை உத்தரவு

நுபுர் சர்மா கருத்தை ஆதரித்து பதிவிட்டதால் உமேஷ் கோலேவை(வயது 54) கொலை செய்ததாக குற்றவாளிகள் கூறியிருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி விக்ரம் சலி தெரிவித்தார்.
உதய்பூர் கொலையுடன் ஒத்துப்போகும் அமராவதி கொலை? என்.ஐ.ஏ விசாரணைக்கு உள்துறை உத்தரவு
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா (வயது 37), ஆங்கில செய்தி சேனல் ஒன்று கடந்த மே மாதம் 26-ந் தேதி நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நபிகள் நாயகம் பற்றி வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பல்வேறு போராட்டங்களுக்கும் வழி வகுத்தது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர் பட்டப்பகலில் சமீபத்தில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது.

கன்னையா லாலை கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கொலையில் தொடர்புடையே மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் அமராவாதியில் கடந்த வாரம் வேதியல் நிபுணர் உமேஷ் கோலே (54) கொல்லப்பட்ட சம்பவம் உதய்பூர் கொலையுடன் ஒத்துப்போவதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக உமேஷ் கோலே சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இவர் கடந்த ஜூன் 21ஆம் தேதி அவரின் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முத்சிர் அகமது, ஷாருக் பதான், அப்துல் தௌபிக், சொயப் கான், அதிப் ரஷித் ஆகிய ஐந்து பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. அதேவேளை, யூசுப் கான் என்ற ஆறாவது நபரை காவல்துறை தொடர்ந்து தேடி வருகிறது. அமராவதி கொலைக்கும் உதய்பூர் கொலைக்கும் ஒற்றுமை உள்ளதால் அமராவதி கொலை வழக்கு விசாரணையும் தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com