அமிர்தசரஸ் வெடி குண்டு தாக்குதல் : குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை

அமிர்தசரசில் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
அமிர்தசரஸ் வெடி குண்டு தாக்குதல் : குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை
Published on

சண்டிகார்,

பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசுக்கு அருகே ராஜாசான்சி பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினரின் வழிபாட்டு தலம் (நிரங்கரி பவன்) இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்தில் நேற்று காலையில் 200க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், தாங்கள் கொண்டு வந்திருந்த கையெறி குண்டு ஒன்றை எடுத்து திடீரென வழிபாட்டு தலத்தை நோக்கி வீசினர். அது மக்கள் கூட்டத்தில் போய் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிரங்கரி பவனில் கையெறி குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அமிர்தசரஸ் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. குண்டுவீச்சு குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் ராஜாசான்சியை நோக்கி விரைந்தனர்.

அங்கு சென்ற அவர்கள் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மத வழிபாட்டு தலத்தில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் மாநில முதல்மந்திரி அம்ரீந்தர் சிங், உடனடியாக பாதுகாப்பு உயர் அதிகாரிகளை கூட்டி சட்டம்ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்ட அவர், மாநிலத்தில் இயங்கிவரும் பிற நிரங்கரி பவன்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்மந்திரி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அம்ரீந்தர் சிங் கூறினார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் என டி.ஜி.பி. சுரேஷ் அரோரா தெரிவித்தார். இது எந்தவொரு தனி நபர் மீதான தாக்குதலாக இல்லாமல் ஒரு கூட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிவதால், இதை பயங்கரவாத செயல் என்றே எடுத்துக்கொள்வோம் எனவும், அந்த கோணத்திலேயே விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் பற்றிய தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில உதவி எண் -181 என்ற எண்ணில் தகவல் தரலாம் எனவும் தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com