

நடிகர் சிவராஜ்குமார்
கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சிவராஜ்குமார். நேற்று அவர் மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூருவில் உள்ள உட்லேண்ட் தியேட்டருக்கு சென்று அங்கு அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பஜ்ரங்கி - 2 படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். மேலும் அந்த படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து மகிழ்ந்தார். அதையடுத்து புனித் ராஜ்குமார் நடத்தி வந்த சக்தி தாமா ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள குழந்தைகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் தம்பியும், நடிகருமான புனித் ராஜ்குமாரின் மறைவில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. அவர் மீது மக்கள் கொண்ட அன்பு அளப்பரியது. அவர் நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் விரைவில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் 23 வாரங்களில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும்.
மனிதாபிமானம் முக்கியம்
எனக்கு புனித் ராஜ்குமாரின் நினைவாகவே உள்ளது. அவரது பாதையில் நானும் சென்று ஆதரவற்றோருக்கு சேவை செய்ய விரும்புகிறேன். பஜரங்கி - 2 படத்தில் மனிதர்கள் முக்கியமல்ல, மனிதாபிமானம் தான் முக்கியம் என்பதை எடுத்துக் கூறியுள்ளோம். மனிதாபிமானத்துக்கு எடுத்துக்காடாக எனது தம்பி நடந்துகொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.