ஆனைமலை மிகச்சிறந்த புலிகள் காப்பகம் - மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகம், மிகச் சிறந்த புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களின் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் மிகச்சிறந்தது, மிக நன்று, நன்று மற்றும் சுமார் என 4 பிரிவுகளில் காப்பகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இதில் தமிழ்நாட்டில் ஆனைமலை, முதுமலை காப்பகங்கள் மிகச்சிறந்த பிரிவிலும், சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை காப்பகங்கள் 'மிக நன்று' பிரிவிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை காப்பகம் 'நன்று' பிரிவிலும் இடம் பெற்று உள்ளன.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே உலக புலிகள் தினத்தையொட்டி நேற்று உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அஸ்வினிகுமார் சவுபே கலந்து கொண்டார். அங்கே அவர் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை விவரமும் இடம்பெற்று இருந்தது.

அதன்படி அதிகபட்சமாக 3,925 புலிகள் இருப்பதாகவும், சராசரி கணக்கில் 3,682 புலிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உலகில் புலிகள் அதிகமாக வசிக்கும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com