ஆந்திரா - விஜயவாடா பேருந்து நிலையத்தில் பயங்கர விபத்து

பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா - விஜயவாடா பேருந்து நிலையத்தில் பயங்கர விபத்து
Published on

அமராவதி,

ஆந்திராவில் நடைமேடை மீது ஏறி, பேருந்து மோதிய விபத்தில் அங்கிருந்த பயணிகளில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி,

'விபத்தில் சிக்கிய பேருந்து விஜயவாடாவில் இருந்து குண்டூருக்கு செல்லவிருந்ததாகவும், பேருந்து நிலையத்தில் வாகனத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக ஓட்டுநர் முன்னோக்கி நகர்த்தியதால் நடைமேடை மீது பேருந்து ஏறியதாக மண்டல மேலாளர் எம்.யேசு தானம் தெரிவித்தார்'என கூறப்பட்டுள்ளது.

விஜயவாடா பேருந்து நிலையத்தில் நடைமேடை எண் 12ல் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. காலை 8.20 மணியளவில் நடந்ததாகவும், பேருந்து மோதியதில் அந்த இடம் சிறிது சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக விஜயவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் வீரய்யா, பேருந்துக்காக காத்திருந்த குமாரி, சிறுவன் அயான்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com