

அமராவதி,
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள கவுலேபள்ளி அருகே, மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வேனில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேனில் புகை கிளம்பியதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக வேனை ஓரமாக நிறுத்தி அனைத்து பயணிகளையும் வெளியேற்றினார். தொடர்ந்து சில வினாடிகள் வேன் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.