பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தி விட்டது: ஏ.கே. அந்தோணி பேட்டி

பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தி விட்டது என்றும் அது மிக தவறான முடிவு என்றும் ஏ.கே. அந்தோணி பேட்டியின்போது கூறியுள்ளார்.
பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தி விட்டது: ஏ.கே. அந்தோணி பேட்டி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் கே. அந்தோணி. இந்நிலையில், காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய அனில், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி. முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார்.

அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் வழங்கினார். கடந்த ஜனவரியில் காங்கிரசில் இருந்து அனில் அந்தோணி விலகினார்.

பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி. ஆவண படத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகன் காங்கிரசில் இருந்து விலகினார்.

பி.பி.சி. நிறுவனம் பிரதமர் மோடியை பற்றிய ஆவண படம் ஒன்றை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. அதில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காலனி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகனான அனில் அந்தோணி, இந்திய அமைப்புகளின் மீதுள்ள பி.பி.சி.யின் பார்வையானது, இந்திய இறையாண்மையின் வலிமையை குன்ற செய்து விடும் என டுவிட்டரில் பதிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சியான ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அவர் பதிவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் திடீரென காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், காங்கிரசில் உள்ள எனது பதவியில் இருந்து விலகி உள்ளேன். பேச்சுரிமைக்காக போராடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது டுவிட்டை நீக்கும்படி கூறி, சகித்து கொள்ள முடியாத அளவுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன.

ஆனால், அதற்கு நான் மறுத்து விட்டேன் என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, தனது பதவி விலகல் கடிதம் ஒன்றையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டார். கேரள காங்கிரசின் ஐ.டி. பிரிவு தலைவராகவும் அனில் அந்தோணி பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணைய கூடும் என யூகங்கள் வெளிவந்தன. இந்நிலையில், அவர் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளார்.

அனில் அந்தோணி பா.ஜ.க.வில் சேர்ந்ததுபற்றி, முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே. அந்தோணி செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியின்போது, பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தியுள்ளது. அது ஒரு மிக தவறான முடிவு. ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் இந்தியாவின் அடித்தளம் ஆகும்.

2014-ம் ஆண்டுக்கு பின்னர், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்ததும், பன்முக தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் நீர்த்து போக செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

பா.ஜ.க. சீரான தன்மையில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. பன்முக தன்மையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் கருத்து. அவர்கள் நாட்டின் அரசியல் சாசன மதிப்புகளை அழித்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com