

கொல்கத்தா,
நாட்டின் பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைகளை படைத்த பிரபலங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது.
இதில் மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த விருதை ஏற்க மறுத்து விட்டார்.
இதைப்போல அந்த மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் அனிந்தியா சட்டர்ஜியும், பத்மஸ்ரீ விருதை நிராகரித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த கவுரவத்தை ஏற்க வேண்டும் என டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. இதற்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் நேர்மையாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டேன். விருது பெறும் கட்டத்தை நான் கடந்து விட்டேன் என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எனது சமகாலத்தவர்கள் மற்றும் இளையவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பத்மஸ்ரீ பெற்று விட்டனர். இந்த சூழலில் இப்போது அதை (விருது) ஏற்க முடியாது என்று குறப்பிட்டார்.
இந்த காரணத்தை சுட்டிக்காட்டி மேற்கு வங்காள பாடகி சிந்தியா முகர்ஜியும் பத்மஸ்ரீ விருதை நிராகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பத்ம விருதை இதற்கு முன் நிராகரித்தவர்கள்:
சினிமா கதாசிரியர் சலீம் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை நிராகரித்தார். 2005 ஆம் ஆண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் ரோமிலா தாப்பார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம் பூஷண் விருதை நிராகரித்தார். 1974ல் அவருக்கு அளிக்கப்பட்ட விருதை இந்திய ராணுவ சீக்கியக் கோயிலில் நடத்திய தாக்குதலைக் கண்டித்து 1984ல் அவ்விருதை திருப்பியளித்தார். நடிகர் குஷ்வந்த் சிங், 1974ல் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை 1984ல் நிராகரித்தார். இருப்பினும் 2007ல் வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.