மும்பை குறித்த பேச்சு: அண்ணாமலைக்கு உத்தவ் சிவசேனா கண்டனம்

தேர்தல் பிரசாரத்தில் மும்பை மராட்டியத்தின் நகரம் அல்ல என்று அண்ணாமலை பேசியதாக கூறி உத்தவ் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை குறித்த பேச்சு: அண்ணாமலைக்கு உத்தவ் சிவசேனா கண்டனம்
Published on

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மும்பையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் நரேந்திர மோடி, மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார்கள். இந்த வேளையில் மும்பை மாநகராட்சியில் ஒரு பாஜக மேயர் இருக்க வேண்டும். ஏனென்றால் மும்பை என்பது மராட்டியத்தின் நகரம் அல்ல, இது ஒரு சர்வதேச நகரம் என்றார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு உத்தவ் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மராட்டிய தலைநகரம் குறித்து இப்படி பேச பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளரான அண்ணாமலைக்கு எப்படி துணிச்சல் வந்தது?. இதுதான் பா.ஜனதாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? அண்ணாமலை மீது உடனடியாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும். அவரை மும்பையை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது. துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் சுயமரியாதை எங்கே போனது? எவ்வளவு காலம் இப்படி அடிபணிந்து இருப்பீர்கள்? என்றார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்து பேசிய பாஜக மூத்த தலைவரும், மந்திரியுமான சந்திரசேகர் பவன்குலே, பொதுவாக ஒரு மேடையில் பேசும்போது சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் அல்லது திரித்து கூறப்படலாம். மும்பையை ஒரு சர்வதேச நகரம்' என்று அவர் குறிப்பிட்டதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். அதை விடுத்து உடனே தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com