

ஷில்லாங்,
மேகாலயா மாநிலத்தில் முதல்மந்திரி முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர், ஐக்கிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இரு சுயேச்சைகள் என மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் முன்பு மந்திரிசபையில் இடம்பெற்று இருந்தவர்கள். அவர்களை முதல்மந்திரி முகுல் சங்மா சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார்.
பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் கோன்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியில் இணையப்போவதாக அறிவித்து உள்ளனர். தேசிய மக்கள் கட்சி பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சி ஆகும். 8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள போதிலும் சட்டசபையில் 9 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசின் பலம் 33 ஆக உள்ளதால், அரசுக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை.
60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபையின் பதவி காலம் வருகிற மார்ச் மாதம் 6ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு அரசுக்கு ஆதரவாக இருந்து வந்த 8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.