

முன்னாள் போலீஸ் கமிஷனர்
தொழில் அதிபர் அம்பானி வீட்டின் முன்பு கார் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின்வாசே கைது செய்யப்பட்டதை அடுத்து, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். இந்தநிலையில் பரம்பீர் சிங் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் ஷியாம்சுந்தர் அகர்வால் என்ற கட்டுமான அதிபர் பரம்பீர்சிங் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.15 கோடி கேட்டதாக மெரின்டிரைவ் போலீசில் புகார் அளித்தார்.இதன் புகாரின் படி போலீசார் பரம்வீர் சிங் உள்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மற்றொரு வழக்கு
இந்தநிலையில் தானேயில் கோப்ரி போலீஸ் நிலையத்தில் சரத் அகர்வால் என்பவர் பரம்பீர் சிங் மீது மற்றொரு புகாரை பதிவு செய்துள்ளார்.இதில் அவர் பரம்பீர் சிங் முன்பு தானே போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது தன்னை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அவரது நிலத்தை வலுகட்டாயமாக பறித்துக்கொண்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின்படி போலீசார் பரம்பீர் சிங், மும்பையில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வரும் பிரங் மனேரே மற்றும் போலீஸ் அதிகாரிகளான சஞ்சய் புனாமியா, சுனில் ஜெயின் மனோஜ் கோட்கர் ஆகியோர் மீது மிரட்டி பணம் பறித்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.