மதுரை டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.
மதுரை,
மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், மதுரை மாநகராட்சியின் 16-வது வார்டு பகுதியில் உள்ள பகுதிகள் மறு வரையறை செய்வதற்கு முன்பாக வண்டியூர் குளம் மற்றும் நீர் பிடிப்பு பகுதி என வகைப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அது அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்து, டைடல் பார்க்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் அந்த நிலம் வண்டியூர் குளம் என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. ஆகவே இந்த இடத்தில் டைடல் பார்க் கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது. ஏனெனில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது பொது நலத்திற்கு எதிரானது. நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், அது தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது.
எனவே மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், "வண்டியூர் குளம் இருந்த இடத்திலேயே தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்த பகுதி 45 ஆண்டுகளுக்கு முன்பாக மறு வரையறை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து ஆவணங்களை ஆய்வு செய்த ஐகோர்ட்டு, மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இருந்த இடத்திலேயே தற்போது டைடல் பார்க் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டுமே பொதுமக்களின் நலனுக்கானது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்க தலைவர் மயில்சாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவானது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்: 44 ஆண்டுகளுக்கு முன்னர் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளதே, அப்படி இருக்கையில் இதை நீர் நிலை என எப்படி கருத முடியும்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜெய்சுகின்: இந்த நிலத்தை வருவாய் துறையினர் தான் வகைப்படுத்த முடியும். ஆனால் நிலத்தை மாநகராட்சி வகைப்படுத்தி உள்ளது. அதனை எப்படி சட்டபூர்வமானது என கருத முடியும் என தெரிவித்தார்.
ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






