

பெங்களூரு,
தெற்கு மண்டலத்திற்கான புதிய ரெயில்வே பாதுகாப்பு ஆணையராக வி.வெங்கடசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய ரெயில்வே மின் பொறியாளர்கள் சேவை(IRSEE) 1993 தொகுதியைச் சேர்ந்த வி.வெங்கடசுப்பிரமணியன், செப்டம்பர் 2026-இல் பெங்களூரு தெற்கு மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையராக(CRS) பொறுப்பேற்றார். தெற்கு மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையராக இவரது அதிகார வரம்பிற்குள் தெற்கு ரெயில்வே, தென்மேற்கு ரெயில்வே, பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் கொச்சி மெட்ரோ ரெயில் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
ரெயில்வே செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பில் பரந்த அனுபவம் கொண்ட மின் பொறியியல் அதிகாரியான வெங்கடசுப்பிரமணியன், தனது பணிக்காலத்தில் தெற்கு ரெயில்வேயின் சென்னை, சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களிலும், தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு கோட்டத்திலும் பணியாற்றியுள்ளார். மின்சார ரெயில் இன்ஜின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன், இழுவை மின் விநியோக அமைப்புகளின் (traction distribution systems) கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளிலும் இவர் பங்காற்றியுள்ளார்.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையராக பொறுப்பேற்பதற்கு முன், வெங்கடசுப்பிரமணியன் ரெயில்வே வாரியத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். அங்கு அவர் மின்சார மற்றும் டீசல் ரெயில் இன்ஜின்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பொறுப்புகளை வகித்தார்.
* புதிய ரெயில்வே அல்லது மெட்ரோ வழித்தடங்களை திறப்பதற்கான அனுமதி அளித்தல்.
* மோசமான ரெயில் விபத்துகள் குறித்து விசாரணை நடத்துதல்.
* சிறிய மாற்றங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல் அளித்தல்.
* அளவீட்டு விதிமுறைகளில் இருந்து(Schedule of Dimensions) ஏற்படும் விலகல்களுக்கு விதிவிலக்கு அளித்தல்; இந்திய ரெயில்வேயில் வழக்கமான அளவை விடப் பெரிய அல்லது அதிக பரிமாணம் கொண்ட சரக்குகளை (ODC) எடுத்துச் செல்வதற்கான அனுமதி அளித்தல்.
* செயல்பாட்டில் உள்ள வழித்தடங்கள் மற்றும் பிற ரெயில்வே அல்லது மெட்ரோ சொத்துகளை அவ்வப்போது ஆய்வு செய்தல்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.