அரியானா கலவரம்: விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

வன்முறையால் பாதியில் நிறுத்தப்பட்ட ஊர்வலத்தை நூ மாவட்டத்தில் இருந்து மீண்டும் தொடங்க விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்தது.
அரியானா கலவரம்: விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு
Published on

நூ,

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலம் நடந்தது. அப்போது சிலர் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது.

வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் இந்த கலவரம் குருகிராம் வரை பரவியது. இந்த கலவரத்தில் 2 ஊர்காவல் படை வீரர்கள், ஒரு மத குரு உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 2 வாரங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை நீடித்த நிலையில் பின்னர் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில் வன்முறையால் பாதியில் நிறுத்தப்பட்ட ஊர்வலத்தை நூ மாவட்டத்தில் இருந்து மீண்டும் தொடங்க விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்தது. அதன்படி நூ மாவட்டத்தில் உள்ள நல்ஹர் கோவிலில் இருந்து ஆகஸ்டு 28-ந் தேதி ஊர்வலத்தை தொடங்க அனுமதி கோரி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை நிராகரித்த நூ மாவட்ட நிர்வாகம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க மறுத்துவிட்டது. ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை நூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்தர் பிஜர்னியா உறுதிப்படுத்தினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com