வாட்ஸ்-அப் வதந்தியால் கும்பல் தாக்குதல், மூன்று சாமியார்களை ராணுவம் காப்பாற்றியது

வாட்ஸ்-அப் வதந்தியால் ஏற்பட்ட கும்பல் தாக்குதலில் இருந்து மூன்று சாமியார்களை ராணுவம் காப்பாற்றியது.
வாட்ஸ்-அப் வதந்தியால் கும்பல் தாக்குதல், மூன்று சாமியார்களை ராணுவம் காப்பாற்றியது
Published on

கவுகாத்தி,

இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல், பலாத்காரம் மற்றும் மதவாத மோதல்கள் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்தியால் ஏற்படும் கும்பல் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். போலிச் செய்திகளை நம்பி அப்பாவி மக்களை கொல்லும் துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் கார்பி அங்லோங் மாவட்டத்தில் கடந்த மாதம் வாட்ஸ்-அப் வதந்தி காரணமாக இருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இப்போதும் வதந்தி செய்தி காரணமாக கும்பல் ஒன்று மூன்று சாமியார்களை தாக்கியுள்ளது, இதுதொடர்பாக தகவல் அறிந்த ராணுவம் தலையிட்டு உடனடியாக சாமியார்களை காப்பாற்றியது.

ஹாப்லோங் பகுதியில் குழந்தைகளை கடத்தும் கும்பல் மையம் கொண்டுள்ளது என்ற போலிச் செய்தியை நம்பி சாமியார்களை கும்பல் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. 26, 31 வயதுடைய இளைஞர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார்கள் என்பது தெரியவந்துள்ளது. சாமியார்கள் மாகாரில் இருந்து ஹாரன்காஜோ நோக்கி காரில் சென்ற போது, கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. பின்னர் அவர்களை வெளியே இழுத்து தாக்கியுள்ளது. அப்போது தகவல் அறிந்த ராணுவம் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தது. ஒரு சாமியாரை ராணுவம் காப்பாற்றிய நிலையில் இருவர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டிய பொதுமக்கள் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தனர். சாமியார்களை ராணுவ முகாமிற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற ராணுவம் அவர்களை போலீசிடம் ஒப்படைத்தது.

சாமியார்கள் குழந்தை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்கள் தாக்கியுள்ளனர். இவ்விவகாரத்தில் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com