

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலை எதிர்கொள்ள இந்திய மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ஈரான் அரசு இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது. ஈரான் அனுப்பி வைத்த 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகளால் ஈரான் தனது நண்பர்களுக்கு உதவுவதை என்றும் நிறுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளது.