

பெங்களூரு,
காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் கடந்த பிப்ரவரி 26ந்தேதி வந்தன. அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன. ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் மிக்-21 ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.
அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. சென்னையை சேர்ந்த இவரது தந்தையும் இந்திய விமான படையின் முன்னாள் அதிகாரி ஆவார்.
ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து சர்வதேச அளவில் நெருக்கடி தரப்பட்டது. இதனால் பாகிஸ்தான் இதற்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி அபிநந்தன் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தனின் துணிச்சலுக்கு பாராட்டு கிடைத்தது. அதே நேரத்தில், அவரது மீசையும் பிரபலமடைந்தது. இளைஞர்கள் பலர் அவரை போன்றே மீசை வளர்க்க தொடங்கி ரசிகர்களாகினர்.
இந்திய விமான படை விமானி அபிநந்தனின் உருவ படத்தினை டைப்ரைட்டர் உதவியுடன் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வசித்து வரும் ஏ.சி. குருமூர்த்தி என்ற ஓவியர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, அவர் உண்மையான ஹீரோ. நமது நாட்டிற்கு உண்மையான புகழை அவர் கொண்டு வந்துள்ளார். இதுவே என்னை அவரிடம் ஈர்த்துள்ளது என கூறியுள்ளார்.