டெல்லி முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் ரேகா குப்தா தலைமையிலான மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது 10 நாட்களுக்கும் மேலாக முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க. மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது. டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, புதிய முதல்-மந்திரிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கு, டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். டெல்லி மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு பணியிலும் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com