போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் ஆர்யன் கான்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி 14 நிபந்தனைகளுடன் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் ஆர்யன் கான்
Published on

மும்பை,

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு, சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது. இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் கடந்த மாத இறுதியில் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் தான் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஆர்யன் கான் தனது வழக்கறிஞர் நிகில் மானேஷிண்டேவுடன் இன்று வந்தார். பின்னர் அங்கு ஆஜராகி கையெழுத்திட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com