28 நாட்களுக்கு பிறகு போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் சிறையில் இருந்து விடுவிப்பு

ஆர்யன் கான் விடுவிக்கும் நடைமுறை முடிந்து 28 நாட்களுக்கு பிறகு ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கபட்டார்.
28 நாட்களுக்கு பிறகு போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் சிறையில் இருந்து விடுவிப்பு
Published on

மும்பை

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்தி விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோரை மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இரண்டு நாட்களாக நடந்து வந்தது. ஷாருக்கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய மும்பை ஐகோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவருக்கு நேற்று 14 ஜாமீன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

ஆர்யன் கான் விடுவிக்கும் நடைமுறை முடிந்து 28 நாட்களுக்கு பிறகு ஆர்தர் ரோடு சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். தந்தை ஷாருக்கானுடன் அவர் தனது இல்லமான மன்னத்திற்கு செல்கிறார்.

பாதுகாவலர்களால் சூழப்பட்ட, ஆர்யன்கான் வெள்ளை ரேஞ்ச் ரோவரில் ஏறி கிளம்பினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com