கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம்தான்

கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டும் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கூறினார்.
கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம்தான்
Published on

ஐதராபாத்,

கொரோனா சிகிச்சை பணிகளுக்கான நிதி தேவைக்காக, எம்.பி.க்கள் சம்பளத்தை மத்திய அரசு 30 சதவீதம் குறைத்துள்ளது. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

தெலுங்கானா மாநில அரசு ஒருபடி மேலே போய், தனது மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் 50 சதவீத சம்பளத்தை பிடித்துக் கொண்டது. மீதி 50 சதவீத சம்பளத்தை மட்டுமே வழங்கியது.

இந்நிலையில், தெலுங்கானா மந்திரிசபை கூட்டம், முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதன்பிறகு சந்திரசேகர ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த மாதத்தை போல், நடப்பு ஏப்ரல் மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்படும். இருப்பினும், ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் 75 சதவீத சம்பளம் அளிக்கப்படும்.

ஆனால், மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த மாதமும் 75 சதவீத சம்பளம் பிடித்தம் செய்யப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு அவர்களது மொத்த சம்பளத்தில் 10 சதவீதம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.

மின்துறையில் பணியாற்றும் 34 ஆயிரம் ஊழியர்கள், தடையற்ற மின் வினியோகத்துக்கு பாடுபட்டதால், அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும்.

கொரோனா பாதிப்பால், தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு உதவ வேண்டும்.

தெலுங்கானாவில், மே 7-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 5-ந் தேதி மீண்டும் நடக்கும் மந்திரிசபை கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்று முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com