

புதுடெல்லி,
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் உத்தர பிரதேச தேர்தல் களம் தற்போதே மெல்ல மெல்ல சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதின் ஓவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் ஆலோசனை நடத்தவில்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தோதலைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை இரு கட்சிகளுமே மறுத்து செய்தி வெளியிட்டுள்ளன.