அசாம்: சுகோய் போர் விமானம் விபத்து.. விமானப்படை வீரர்கள் இருவர் பலி

அசாமில் ஏற்பட்ட விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அசாம்: சுகோய் போர் விமானம் விபத்து.. விமானப்படை வீரர்கள் இருவர் பலி
Published on

கவுகாத்தி,

ரஷிய தயாரிப்பான சுகோய் சூ 30 போர் விமானம், இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சுகோய் சூ 30 ரக விமானங்கள் 1997-ல் இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்தது. 250 விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ள நிலையில், தற்போது அதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டம் ஜோர்ஹட் விமான தளத்தில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் நேற்று புறப்பட்டது. அந்த விமானம் இரவு 7.42 மணியளவில் ரேடார் தொடர்பிலிருந்து காணாமல் போனதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக் கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த விமானம், ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள அசாமின் கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என்று விமானபடை தெரிவித்தது.

இந்த நிலையில், அசாமில் ஏற்பட்ட விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சுகோய் சூ 30 விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் விமான லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோரின் இழப்பை இந்திய விமானப்படை ஒப்புக்கொள்கிறது. இந்திய விமானப்படையின் அனைத்து பணியாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்கள், மேலும் இந்த துயரமான நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறார்கள்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com