
தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. முன்னதாக அங்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில், மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது.
வாக்குப்பதிவுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப்படையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, தேர்தல் நடைபெறும் இந்த மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.