

லக்னோ,
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி உத்தரபிரதேசத்தில் நேற்று சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, குறுக்கீடு இல்லாத 36 மணி நேர தொடர் விவாதத்தை சபாநாயகர் ஹிரித்ய நரைன் தீட்சித் தொடங்கி வைத்தார். அப்போது, இந்த கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகளுக்கு அவர் கண்டனமும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், காந்தி பிறந்த தினத்தையொட்டி சிறப்பு கூட்டம் நடத்தும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததுடன், இதில் பங்கேற்பதையும் உறுதி செய்திருந்தனர். ஆனால் எந்த காரணமும் இன்றி திடீரென இந்த கூட்டத்தை அவர்கள் புறக்கணித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கண்டனம் வெளியிட்டார்.
இந்த சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனக்கூறிய சபாநாயகர், மாநிலத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் எதிர்காலம் அறிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். காந்தியடிகளின் கனவாக இருந்த, ஐ.நா.வின் 16 அம்ச நிலையான வளர்ச்சி திட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.