

புதுச்சேரி,
புதுச்சேரி வில்லியனூர் அருகே அரியூர் பகுதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து, கடையில் உள்ள பணம் மற்றும் பொருட்களை இளைஞர் ஒருவர் திருட முயன்றார். இந்நிலையில், அங்கிருந்த மக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஜஸ்டின் என்ற இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அந்த இளைஞர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், ஓணம் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாட கேரளா செல்ல பணம் தேவைப்பட்டதால் செல்போன் கடைக்குள் புகுந்து திருட முயன்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து ஜஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்த வில்லியனூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.