உத்தரகாசி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

உத்தரகாசியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரகாசி,
உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இன்று கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "தாராலி பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் இழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாவட்ட நிர்வாகக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தர்காசி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், வானிலைத் துறை தொடர்ந்து மழை பெய்யும் என்று கணித்திருப்பதாலும், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது






