

கொல்கத்தா,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதி மந்திரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்கான மருந்துக்கு விதிக்கப்பட்டுவந்த வரி நீக்கப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பூசிக்கான வரி குறைக்கப்படவில்லை. இது பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலை சர்வாதிகாரமும், பெரும்பான்மைத்துவமும் கைப்பற்றியுள்ளதாக மேற்குவங்காள நிதிமந்திரி அமித் மித்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சர்வாதிகாரமும், பெரும்பான்மைத்துவமும் ஜிஎஸ்டி கவுன்சிலை கைப்பற்றியுள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும் என்றார்.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலில் தான் பேசி முயற்சித்த போது அவரது மைக் மியூட் செய்யப்பட்டதாகவும் அமித் மித்ரா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அமித் மித்ரா எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இது குறித்து அமித் மித்ரா கூறுகையில், கூட்டத்தில் நான் பல முறை கேட்டேன். கூட்டத்தின் நிறைவு பகுதியில் எனது கையை தொடர்ந்து உயர்த்தினேன். நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள். பிற நிதிமந்திரிகளின் மைக்குகள் மத்திய இணையதள நிர்வாக குழுவால் மியூட் செய்யப்படவில்லை.
ஆனால், எனது மைக் மட்டும் மியூட் செய்யப்பட்டது. அதை நான் பார்த்தேன். நான் ஒன்றும் முட்டாள் அல்ல. இது குறித்து விசாரணை செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். எனது வேறுபாடுகளை தெரிவிக்க முயன்றபோது முக்கியமான தருணத்தில் எனது மைக் மியூட் செய்யப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தடுப்புசிக்கான வரியை குறைக்காத ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு மக்களுக்கு எதிரானது என்று மேற்குவங்காள நிதிமந்திரி அமித் மித்ரா குற்றஞ்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.