அயோத்தியில், பிரமாண்ட மசூதி, மருத்துவமனை கட்டுமானப் பணி, மே மாதம் துவங்கம் என தகவல்

அயோத்தியில், பிரமாண்ட மசூதி, மருத்துவமனை ஆகியவற்றின் கட்டுமானப் பணி மே மாதம் துவங்க உள்ளது.
அயோத்தியில், பிரமாண்ட மசூதி, மருத்துவமனை கட்டுமானப் பணி, மே மாதம் துவங்கம் என தகவல்
Published on

லக்னோ,

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உத்தரவிட்டது.

அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில், உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது.

இந்நிலையில் இதன் செய்தி தொடர்பாளர் அத்தர் ஹூசேன் கூறியதாவது:

ஒதுக்கப்பட்ட நிலத்தில், பிரமாண்ட மசூதி, மருத்துவமனை, அருங்காட்சியகம், கலாசார மையம் ஆகியவை அமைய உள்ளன. கட்டட வடிவமைப்பை, மூத்த கட்டடவியல் வல்லுனர், எஸ்.எம்.அக்தர் உருவாக்கியுள்ளார். அதில், சாலையை அகலப்படுத்துவது உட்பட, சில மாற்றங்களை செய்ய, அறக்கட்டளை உறுப்பினர் குழு கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

மசூதி வளாகத்தில், பசுமை பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட உள்ளன.

அடுத்த வாரம், அயோத்தி நகர நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு, வடிவமைப்பு வரைபடம் அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த உடன், வரும் மே மாதம், மருத்துவமனையின் கட்டுமான பணி துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com