

டெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கடவுள் ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றன. இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
இதனிடையே, ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்களில் 8 பேர் காணிக்கை, நன்கொடை பணத்தை திருடியுள்ளனர். மேலும், அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்குகளுக்கு செலுத்தியும், உறவினர்களுக்கு கொடுத்தும் உள்ளனர். திருடிய பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் 3 கோடி ரூபாய் வரை காணிக்கை பணத்தில் திருடப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கைது செய்யப்படவர்களின் வீடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமர் கோவில் காணிக்கை திருட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த திருட்டு தொடர்பாக உ.பி.மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக்குழு விரைவாக விசாரணை நடத்தி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி ராமர் கோவில் நிர்வாகம், மத்திய அரசு, உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.