

லக்னோ,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் உள்பட 6 பேர் மீது, மசூதியை இடிக்க சதி செய்த குற்றச்சாட்டும் சேர்க்கப்பட்டு இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, சதி குற்றச்சாட்டை ரேபரேலி கோர்ட்டு நீக்கியது. இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட 6 பேர் மீதும் சதி குற்றச்சாட்டை மீண்டும் சேர்த்து வழக்கு நடத்துமாறு கடந்த மாதம் 19ந் தேதி தீர்ப்பு அளித்தது.
மேலும், ரேபரேலி கோர்ட்டில் நடந்து வந்த விசாரணையை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்டது. அக்கோர்ட்டில், கடந்த 20ந் தேதி முதல் தினசரி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி, அத்வானி உள்ளிட்ட 6 பேர் மீதும் லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) சதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சிறப்பு நீதிமன்றம் அவர்கள் மீது கூடுதல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறது.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 30-ம் தேதிக்குள் ஆஜராக சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.