

புதுடெல்லி,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் உள்பட 32 பேரையும் விடுதலை செய்து கடந்த செப்டம்பர் 30-ந் தேதி லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதை எதித்து இவ்வழக்கில் சி.பி.ஐ. சாட்சிகளாக இருந்த ஹாஜி மெகபூப் (வயது 70), ஹபிஸ் சயது அக்லக் (வயது 80) ஆகியோர் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் நேற்று மேல்முறையீடு தாக்கல் செய்தனர். பாபர் மசூதி இடிப்பின்போது, மசூதி அருகே இருந்த இவர்களது வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அது முடிந்த நிலையில், 100 நாட்கள் கழித்து இவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.