கவுகாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தில் அவசரமாக தரையிறக்கம்

கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கவுகாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தில் அவசரமாக தரையிறக்கம்
Published on

மும்பை,

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர். அத்துடன், விமான போக்குவரத்தும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 178 பயணிகள் இருந்தனர். அப்போது கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, "கவுகாத்தியில் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தின் டாக்காவிற்கு திருப்பிவிடப்பட்டது. டாக்காவில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தை இயக்க மாற்றுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அவர்கள் விமானத்திற்குள்ளேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com