முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இன்று பாகினா பூஜை - பசவராஜ் பொம்மை நிறைவேற்றுகிறார்

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பியதை அடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று அந்த ௨ அணைகளிலும் பாகினா பூஜை செய்கிறார்.
முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இன்று பாகினா பூஜை - பசவராஜ் பொம்மை நிறைவேற்றுகிறார்
Published on

மைசூரு

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது ஓய்வெடுத்துள்ளது. மழை ஓய்ந்தாலும் வெள்ளம் இன்னும் வடிந்தபாடில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளன. இந்த அணைகளில் இருந்து கணிசமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 124.74 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 59,734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55,801 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,280 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282.43 அடி தண்ணீர் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 29,768 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 29,844 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 85,645 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு செல்கிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி உள்ளதால், இரு அணைகளிலும் இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பாகினா பூஜை நிறைவேற்ற உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com