

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மூடிகெரேவில் கல்லூரி மாணவி தன்யா தற்கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. முஸ்லிம் மத வாலிபருடனான காதலை கை விடும்படி இந்து அமைப்பினர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவி தன்யா முஸ்லிம் மத வாலிபரை காதலிப்பது பற்றியும், மேலும் அவரைப் பற்றி சில அவதூறான கருத்துகளையும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் பரவ விட்டுள்ளனர்.
இதனையடுத்து மனம் உடைந்த தன்யா தற்கொலை செய்துக் கொண்டு உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனால் மாணவி தன்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக இந்து அமைப்பைச் சேர்ந்த அனிலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் அவருடைய தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் மாணவி தன்யா பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை பரப்பியவர்களையும், அந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தவர்களையும் கைது செய்ய உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தெரிவித்தார். இதுதொடர்பான விசாரணையை போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளநிலையில், இந்து அல்லாத வாலிபர்களுடன் சுற்றும் பெண்களுக்கு பஞ்ரங்தள் கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
பிற மதங்களை சேர்ந்த ஆண்களுடன் நட்பு கொள்ளும் இந்து மாணவிகளுக்கு கடும் எச்சரிக்கையை பஜ்ரங்தள் அமைப்பு விடுத்து உள்ளது.
மூடிகெரே பஜ்ரங்தள் சார்பில் விடுக்கப்பட்டு உள்ள எச்சரிக்கையில், இந்துத்துவாவை காக்க வேண்டியது பஜ்ரங்தள் அமைப்பின் கடமையாகும், இந்து அல்லாத வாலிபர்களுடன் சுற்றும் அனைவரும் கடும் இழப்பை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கை செய்தியை போலீஸ் மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு உள்ளது. மதத்தின் பெயரில் முன்னெடுக்கப்படும் இச்செயலுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் தங்களுடைய நடவடிக்கையை பஜ்ரங்தள் அமைப்பு நியாயப்படுத்தி உள்ளது.