மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து - யோகி ஆதித்யநாத் உத்தரவு

அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து - யோகி ஆதித்யநாத் உத்தரவு
Published on

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை ஒட்டி நேற்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதில் 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததற்கு, உத்தரப்பிரதேச மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் தொடர்ந்துள்ள இந்த பொதுநல வழக்கில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழிகாட்டு பலகைகள், அடிப்படை தகவல்கள் அனைத்து மொழிகளிலும் இடம்பெற்றிருந்தால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், விஐபிகளின் வருகையால், சாதாரண பக்தர்களின் பாதுகாப்பை எவ்விதத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்றும் கூட்ட நெரிசல் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் அந்த பொதுநல மனுவில் சுட்டிகாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இன்று (ஜன.30ம் தேதி) முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை VVIP (விவிஐபி) எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் மகா கும்பமேளா நடைபெறும் பகுதி நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எந்த வாகனத்துக்கும் சிறப்பு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி, வாரணாசி, லக்னோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி வரும் சாலைகளில் இடையூறின்றி வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய உத்கரவிடப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த நிலையில், உ.பி. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com