

புதுடெல்லி,
101 ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
அதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ராஜ்நாத்சிங், ஒரு பேரொலி போன்று வாக்குறுதி அளித்தார். ஆனால், கடைசியில் சிணுங்கல் ஒலியாகவும், பிதற்றல் ஒலியாகவும் முடிந்து விட்டது. ராணுவ தளவாடங்களின் ஒரே இறக்குமதியாளரே ராணுவ அமைச்சகம்தான். எனவே, இந்த தடை தனக்குத்தானே விதித்துக்கொண்ட தடைதான்.
இந்த அறிவிப்பை தன்னுடைய செயலாளர்களுக்கு அவரே அலுவலக உத்தரவாக பிறப்பித்து இருக்கலாம். அவரது அறிவிப்பின் அர்த்தம், இன்று நாம் இறக்குமதி செய்யும் தளவாடங்களை இன்னும் 2 முதல் 4 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்து விட்டு, பின்னர் நிறுத்திக் கொள்வோம் என்பதுதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.