தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு

டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
டெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பத்திரிகை செய்தி அடிப்படையில், இப்பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு டெல்லி அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது. மேலும் தெருநாய்களை பிடிப்பதற்கு யாராவது குறுக்கே நின்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு இன்று விசாரித்தது . அதன்படி, இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு இன்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்படி, டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும். ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும். டெல்லியில் பொதுஇடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்படுகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். வேறு இடங்களில் உணவு அளிப்போர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம். தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
விலங்குகள் நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான படியைக் குறிக்கும் வகையில், தெருநாய்கள் தொடர்பான சுப்ரீம் கோர்ட்ட்டின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நான் வரவேற்கிறேன். இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும் அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது.என தெரிவித்துள்ளார் .






