

புதுடெல்லி,
மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018 சட்டத்தின்கீழ் செய்தித்தாள்களில் வடை, சமோசா, போண்டா உள்ளிட்ட உணவுப் பண்டங்களைப் பொட்டலமாகக் கட்டி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலுக்கு எதிராக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. செய்தித்தாள்களில் உள்ள எழுத்துகளின் மை அந்தப் பலகாரங்களில் கலந்து உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். எனவே, மக்கள் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிர்ண ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனையாளர்களும் உணவக உரிமையாளர்களும் பழைய செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்துக் கொடுப்பது சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், அவ்வாறு சட்டத்தை மதிக்காதவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
செய்தித்தாள்களில் உள்ள கறுப்பு மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், சாயங்கள் மற்றும் ஈயம் போன்றவை உள்ளன. சூடான உணவைச் செய்தித்தாள்மீது வைக்கும்போது, இந்த மை உருகி உணவோடு கலந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது.
இது தீவிர உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கைவிடுத்துள்ளது. செய்தித்தாள்களில் உணவைப் பொட்டலமாக மடித்துக் கொடுப்பது குறித்து அறிந்தால், உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உணவகங்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனையாளர்களும் செய்தித்தாள்களில் மடித்து வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.