

புதுச்சேரி,
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1.25 கோடியை வங்கி அதிகாரி இழந்தது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனை நம்பிய அவர் முதலில் சிறிய தொகையை முதலீடு செய்தபோது அவருக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் 20 தவணைகளாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தார்.
இதன்மூலம் பல கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாக காட்டப்பட்டது. அந்த பணத்தை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாஸ்பேட்டையை சேர்ந்த நபரிடம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ரூ.78 ஆயிரத்து 414-ம், முதலியார்பேட்டையை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.41 ஆயிரத்து 100-ம், முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்து 800-ம், முதலியார்பேட்டையை சேர்ந்த நபருக்கு இணையதள முகவரி அனுப்பி வைத்து ரூ.17 ஆயிரமும், புதுவை சேர்ந்த நபரிடம் ரூ. 1,617-ம் மோசடி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 931 மோசடி நடந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.