

பெல்தங்கடி,
விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பட்டியலினப் பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பயிர்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தி சுமார் ரூ.1.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் வேணூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி மற்றவர்களுடன் சேர்ந்து தனது விவசாய நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பெல்தங்கடி ஹோசங்கடியைச் சேர்ந்த ஹனீப் என்பவர் விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசியதுடன், ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சுமார் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பெண் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி வேணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹனீபை கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வேணூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.