

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் திலீப் கோஷ். எம்.எல்.ஏ.வான இவர் கட்சி தொண்டர் ஒருவரது இல்லத்தில் நேற்று நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு தனது காரில் ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
அவரது கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை பற்றி அவதூறாக பேசி உள்ளனர்.
இதுபற்றி கோஷ் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்புடைய மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால் இதனை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறி பங்குரா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மறுத்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.